திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள கசபா பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வீட்டிலிருந்து, ‘சாரே... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...’ என்றது சிறுவனின் குரல். வீட்டில் இருந்து வெளியே வந்த 8 வயது சிறுவன், போலீசாரிடம் ஒரு பேப்பரை நீட்டினான். அதில், ‘5ம் வகுப்பு படிக்கும் தனது அக்காவும், பக்கத்து வீடுகளில் உள்ள 4 தோழிகளும் விளையாட்டில் தன்னை சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். அடிக்கடி என்னை கிண்டல் செய்கிறார்கள். எனவே, அவர்கள் 5 பேரையும் கைது பண்ணி சிறையில் தள்ள வேண்டும்,’ என்று அவன் எழுதி இருந்தான்.
இதை பார்த்து அதிர்ந்த போலீசார், சிறுவனின் பெற்றோர் மற்றும் புகாரில் கூறப்பட்டிருந்த 4 சிறுமிகளின் பெற்றோரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். சிம்பிள் மேட்டர் தானே, ரொம்ப ஈசியா பசங்களை சமாதானப்படுத்தி விடலாம் என்று போலீசார் கருதினர். ஆனால், சிறுவர்கள் யாரும் மசியவில்லை. ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு, சமரசமாகப் போக 5 பேரும் ஒப்புக்கொண்டனர். இதன்படி, சிறுவனை விளையாட்டில் சேர்த்துக் கொள்வதாகவும், கிண்டல் செய்ய மாட்டோம் என்றும் புகாரில் சிக்கிய 5 சிறுமிகளும் கடிதம் எழுதி கொடுத்தனர். பிறகு தான் சிறுவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. போலீசார், சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுத்து அனுப்பினர்.